கடலோடி
Saturday 25 July 2020
கடல்புறா பாகம் எட்டு
Thursday 23 July 2020
கடல்புறா பாகம் ஏழு
Thursday 16 July 2020
டாஃப்னிக்கின் யானைக்கன்று
நான் ஒருமுறை கென்யாவில் உள்ள துறைமுக நகரமான மொம்பாசாவிற்கு கப்பலில் சென்றிருந்தேன். கென்யா செல்கிறோம் என்றவுடன் அங்குள்ள சாவோ (Tsavo) தேசிய வனக்காப்பகம் தான் நினைவுக்கு வந்தது. மொம்பாசாவிலிருந்து சாவோவிற்கு நெடுந்தொலைவு. ஆகவே அங்கு செல்வதற்கு வாய்ப்பில்லை. அதற்கு பதிலாக அருகிலிருந்த வால்கஞ்ச் (Mwaluganje) யானைகள் சரணாலயத்திற்கு செல்லலாம் என்று திட்டமிட்டேன். ஏஜென்டிடம் பேசி டாக்ஸிக்கு ஏற்பாடு செய்து ஒரு குழுவாக கிளம்பினோம். டாக்ஸியில் நகரத்தை கடந்து சரணாலயப்பகுதிக்கு சென்றவுடன் காடுகளில் பயனிப்பதற்கென்றே பிரத்யோகமாக வடிவமைக்கப்பட்ட வாகனத்திற்கு மாறி நான்கு மணி நேரம் வரை காடுகளின் புழுதிப் பாதைகளுக்கு ஊடாக பயனித்து வனவிலங்குகளை அருகில் சென்று பார்த்துவிட்டு மீண்டும் கப்பலுக்கு திரும்புவதாக திட்டமிட்டிருந்தோம். ஏனெனில் 6 மணி நேரங்களுக்குள் மீண்டும் பணிக்கு திரும்பவேண்டும். எனக்கு ஆர்வமாகவும் அதை விட உள்ளூர பயமாகவும் இருந்தது. ஏனெனில் நாங்கள் செல்வது வனவிலங்குகளை அருகிலிருந்து பார்ப்பதற்காக. அவைகள் எங்களின் மீது தாக்குதலில் ஏதும் ஈடுபட்டால் உயிர்பிழைக்க என்னவெல்லாம் செய்வது என்பது பற்றிய திட்டமிடலிலேயே சிந்தனை முழுதும் இருந்தது.
ஆனால் அப்போது தான் நாங்கள் எதிர்பாராத ஒரு சிறப்பான சம்பவம் நடந்தது. எங்களோடு பயனித்த நண்பன் ஒருவன் செல்லும் வழியில் இருந்த ஒரு மதுபான விடுதியை பார்த்துவிட்டு சிறிது பீர் அருந்திவிட்டு செல்லலாம் என்று வற்புறுத்தவே உள்ள நுழைந்தோம். அவ்வளவு தான். அங்கே நாங்கள் செலவு செய்த நேரத்திற்கு பிறகு கப்பலுக்கு திரும்புவதற்கே மிச்சமிருந்த நேரம் சரியாக இருந்தது. அதோடு என் நீண்ட நாள் கனவுகளில் ஒன்றான ஆப்ரிக்க யானைகளையும், காண்டாமிருகங்களையும் சென்று சந்திக்கும் ஆசை காலி செய்யப்பட்ட பீர் போத்தல்களில் அடைக்கப்பட்டது. அதன்பிறகு இதுநாள் வரை மொம்பாசா செல்ல வாய்ப்பே கிடைக்கவில்லை. வரும் காலங்களில் நிச்சயம் செல்வேன்.
எனக்கு கென்யா என்றவுடன் சாவோ வனக் காப்பகம் தான் நினைவுக்கு வரும் என்று சொல்லியிருந்தேன் அல்லவா. அதற்கு டாஃப்னி ஸெல்ட்ரிக் ( Daphne Sheldrick) என்கிற ஆங்கிலப் பெண்மணியை பற்றி ஏற்கனவே வாசித்திருந்தது தான் காரணம். வன அதிகாரி ஒருவரை மனந்த இவர் 50 ஆண்டுகளுக்கும் மேலாக வனவிலங்களுக்காகவே வாழ்ந்தவர்.குறிப்பாக யானைக் கன்றுகள். கென்யாவில் வருடா வருடம் யானைகள் அவைகளுடைய தந்தங்களுக்காக கொல்லப்பட்டன. 1990இல் உலகம் முழுவதும் தந்தங்கள் தடை செய்யப்பட்டன. அப்படியிருந்தும் தொடர்ந்து யானைகளை சட்டவிரோதமாக அழித்தனர். லாபம் தரும் இந்த வேட்டையில் இன்றளவும் பல கும்பல்கள் ஈடுபட்டுள்ளனர். இன்றும் கேரள தமிழக வனப்பகுதிகளில் சில கும்பல்கள் யானைகளை தந்தங்களுக்காக வேட்டையாடுவதாக ஒரு ரகசியத்தகவல் உண்டு. கென்யாவில் ஒரு கட்டத்தில் மாதத்திற்கு 50 யானைகள் வீதம் கொன்றனர். அப்படியானால் வருடத்திற்கு 600 யானைகள். இந்தியாவிலும் பல வருடங்கள் இந்த நிலை நீடித்து வருகிறது. அது மட்டுமில்லாமல் அவைகளின் வாழ்விடங்களை சூறையாடி காட்டுக்கே ராஜாவான அவைகளை பஞ்சம் பிழைக்க அனாதைகளாக அலையவிட்டு தெருக்களில் பிச்சையெடுக்க கையேந்தவிட்டது என அவைகளுக்கு மனித இனம் இழைத்த கொடுமைகளை சொல்லிமாளாது. இவ்வளவுக்கும் மத்தியில் யானைகள் இன்றும் உலகில் எஞ்சியிருப்பது ஆச்சர்யம் தான்.
இவ்வாறு யானைகள் கொல்லப்படும்போது தனித்துவிடப்படும் கன்றுகள் சிலநாட்களில் செத்துப்போகும். இந்தக் கொடுமைகளை கண்ணுற்ற டாஃப்னிக், யானைக் கன்றுகள் காப்பகம் ஒன்றை ஆரம்பித்தார். கன்றுகள் வளர்ந்து 3,4 வயதை எட்டியதும் அவற்றை மறுபடியும் ஒரு யானைக்கூட்டத்துடன் சேர்த்துவிடுவார். ஆனால் பால்குடி மாறாத யானைக் கன்றுகள் எவ்வளவு தான் கவனமாக பராமரித்தாலும், எத்தனை போத்தல் பசுப்பால் கொடுத்தாலும் அவை இறந்து போயின. காரணம் அவைகளுக்கு பசுப்பால் ஒத்துக்கொள்ளவில்லை. பலவித சோதனை முயற்சிகளுக்கு பின் டாஃப்னிக் ஒரு புதுவிதபாலை கண்டுபிடித்தார் அது தேங்காய்ப்பால். தற்செயலாக தேங்காய்ப் பாலைப் பருகியபோது கன்று தப்பிவிட்டது. அன்றிலிருந்து உலகெங்கிலும் இருக்கும் யானைக் கன்றுகளுக்கு உணவு அதுதான்.
1972இல் அவரிடம் ஒரு யானைக் கன்று அனாதையாக வந்து சேர்ந்தது. அதற்கு எலெனோர் என்று பெயர் சூட்டி வளர்த்து வயது வந்தததும் அதை காட்டு யானைகளுடன் சேர்த்துவிட்டார். 22 வருடங்கள் கழிந்தன. ஒரு நாள் காலை 1994இல் ஒரு யானைக்கூட்டம் அவரிடம் வந்தது. அந்தக் கூட்டத்தில் எலேனோர் இருப்பதாக அவருடைய உள்ளுணர்வு சொன்னது. 'எலேனோர்' என்று குரல் கொடுத்தார். அந்தப் பெரிய கூட்டத்திலிருந்து ஒரு யானை மட்டும் அவரை நோக்கி நடந்து வந்தது. அதை அவர் தடவிக்கொடுத்தார். எலேனோர் அவரை அடையாளங்கண்டு கன்றை தூக்குவது போல மெதுவாக தடவி அவரை தூக்கி விளையாண்டது.
அதன்பிறகு தான் டாஃப்னிக்கிற்கு தன்னுடைய சுயசரிதை எழுதவேண்டும் என்று ஆசை பிறந்தது. பிறகு அவர் எழுதி வெளியிட்ட தன்னுடைய வாழ்க்கை கதை அவருடைய கதை மட்டுமல்ல. யானைகளுடைய கதையும் கூட. புத்தகத்தின் பெயர் Love Life and Elephants. நைரோபியில் இரண்டு வருடங்களுக்கு முன்பு டாஃப்னிக் மரணமடைந்த போது அவருக்கு வயது 82. அவர் நடத்திவரும் யானைக் கன்று அனாதை ஆசிரமத்தில் இதுவரை 130 யானைக் கன்றுகளை காப்பாற்றி அவற்றை காட்டிலே சுதந்திரமாக விட்டிருக்கிறார். டாஃப்னிக் சேவையை பாராட்டி இங்கிலாந்து மகாராணி எலிஸபெத் அவருக்கு OBE பட்டம் வழங்கி கௌரவித்திருக்கிறார்.
சில வருடங்களுக்கு முன்பு டைம் இதழில் வெளியான அவருடைய பேட்டியை தேடி வாசித்தேன். அதில் அவர், " யானைகள் நம்பமுடியாத அளவுக்கு புத்திக்கூர்மை உடையவை. (ஜெயமோகன் ஒரு சிறுகதையில் கூட எழுதியிருப்பார் (மத்தகம் என்று நினைக்கிறேன்) மனிதனுக்கு ஆறறிவு. நாய்க்கு ஏழறிவு. யானைக்கு எட்டறிவு என்று. இதே கடலில் வாழும் நாங்கள் கடலோடிக்கு ஏழறிவு டால்ஃபின்களுக்கு எட்டறிவு திமிங்கலத்திற்கு ஒன்பது அறிவு என்போம்.) மனிதன் ஏன் தங்களை கொல்கிறான் என்று யானைகளுக்கு நன்றாகவே தெரியும். அதனால் அவை தங்கள் தந்தங்களை மரங்களுக்கு ஊடாகவும் இழைதழைளில் மறைவாகவும் மனிதர்களின் கண்களில் படாதவாறு மறைத்து வாழ்கின்றன. இப்போதெல்லாம் அவைகள் பகலில் வெளிவருவதில்லை. மனிதர்களிடமிருந்து தங்களை காத்துக்கொள்ள இரவுப் பிராணிகளாக மாறிவிட்டன். வேட்டை மிருகங்களான சிங்கம், புலி, சிறுத்தை கூட சுதந்திரமாக காடுகளில் வாழ்கின்றன. ஆனால் யாருக்கும் எந்தத் தீங்கும் இழைக்காத யானைகள் மட்டும் ஏன் இந்த உலகத்திலிருந்து அழிக்கப்படுகின்றன. இன்றைக்கு இரவுப் பிராணிகளாக மாறுவது தான் அவைகளுக்கு ஒரே வழி" என்று சொல்லியிருப்பார்.
மனிதர்களைப் போலவே யானைகளும் இறந்த போன மற்ற யானைகளுக்காக தூரங்களிலிருந்து வந்து மௌனமாக நின்று அஞ்சலி செழுத்துகின்றன. அவைகள் வருடக்கணக்கில் துக்கம் அனுட்டிக்கின்றன. கேரளத்தில் வெடிவைத்து காயப்படுத்தப்பட்ட யானை தன் கூட்டத்தை விட்டு பிரிந்து வந்தது இதன் காரணமாகவே கூட இருக்கலாம். தன் கூட்டம் தன்னை நினைத்து வருந்தக்கூடாது, துக்கத்தால் வருடக்கணக்கில் மௌனமாக தனக்காக கண்ணீர் சிந்தக்கூடாது என்ற எண்ணமாக கூட இருக்கலாம். யானைகள் கௌரவமானவை. ஏமாற்றியோ திருடியோ பிழைக்காது. அதைப்போல அவை கோலையாக மடிவதையும் விரும்பாது. கடைசிவரை போராடியே சாகும். யானைகள் அதீத வலி தாங்கும் சக்தி உடையவை. வலியோடு இரண்டு வாரங்கள் வரை போராடி தான் அந்த கர்ப்பிணி யானை மடிந்துள்ளது.
யானைகள் மரித்த இடத்தில் தடிகளையும் தழைகளையும் பரப்பி மற்ற யானைகள் அவைகளுக்கு மரியாதை செய்கின்றன. ஆனால் நாம் அவைகளுக்கு சில்லறைகளை பிச்சையாக போடுகிறோம். அவ்வளவு தான் நமக்கும் அவைகளுக்கும் வேறுபாடு.
Monday 6 July 2020
நானும் முத்தமும் :-
- இப்படி தான் கடைசியாக கப்பலுக்கு போகும்முன் தனியாக அங்கு சென்றேன். நான் அமர்ந்திருந்தது வாசலை பார்த்தவண்ணமிருந்த ஒரு இருக்கையில். அந்த சூழலுக்கும் என் அப்போதைய மனநிலைக்கும் அங்கு இருப்பது எனக்கு சுத்தமாக பொருந்தவில்லை தான். என்ன செய்வது வந்து விட்டோமே எவ்வளவு முடியுமோ அவ்வளவு விரைவில் போய்விடலாம் என்று சாப்பிட ஆரம்பித்தேன். அந்த இடத்திற்கு தனியே வேறு துணையே இல்லாமல் வந்திருந்தது நான் ஒருவனாக தான் இருந்திருக்க வேண்டும். வாரநாட்களின் நன்பகல்நேரம் அது. கூட்டம் ஒன்றும் அவ்வளவாக இல்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக சில நபர்கள் மட்டும் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.
Saturday 27 June 2020
கடல்புறா பாகம் ஆறு
இருள். முழு இருள். துளி அளவு கூட ஒளி இல்லாத இருள். இருள் குறைந்தால் அது வெளிச்சம். ஆனால் இது குறைவே இல்லாத பூரண இருள். உலகில் நிலையானது இருள் தான். உலகமே அழிந்து சாம்பலாகி ஏதுமற்ற வெளியானலும் கடைசியில் எஞ்சுவது இந்த இருள் மட்டும்தான். ஒவ்வொரு கணமும் இருளோடு ஒளி போட்டி போடுகிறது. இறுதியில் இருளே வெல்கிறது. இருந்தும் மீண்டும் மீண்டும் ஒளி இடைவிடாது போட்டி போட்டு தோற்றுக்கொண்டே இருக்கிறது. இருள் நிலையானது. ஒளி நிலையற்றது. மயக்கம் தருவது. நிலையான இருளை மயக்கிதான் மின்னும் ஒளி நிலையற்ற வெளிச்சமாக படர்ந்து பரவுகிறது. மயக்கம் தெளிந்த இருள் மீண்டும் ஒளியை தின்று புதிதாக ஜனிக்கிறது. இருள் தான் வெளிச்சத்தை ஜனிக்கிறது. இருளில் தான் நாமும் ஜனிக்கிறோம்.
படிகளில் விழுந்து கிடந்தேன். ஒரு படியிலிருந்து பார்த்தால் அடுத்த படி தெரியாத அளவுக்கு இருள். கூடவே வலி. உயிர்போகும் அளவுக்கு வலி. கண்களை கூட திறக்க முடியவில்லை. பற்களை இறுக்கமாக கடித்துக்கொண்டு அதன் இடுக்குகள் வழியே காற்றை உள்ளே இழுத்து உஸ் உஸ் என்று வாய் வழியே மூச்சுவிட்டு இறுக்கமாக கண்களை மூடிக்கொண்டேன். வலது கையால் படிகளை தொட்டுத் துழாவி இருட்டுக்குள் மெல்ல நகர்ந்து சுவரை ஒட்டி எழுந்து அமர்ந்தேன். இடது கை மணிக்கட்டில் தான் அடி. வலது கையால் அடிபட்ட கையை அழுத்தி பிடித்துக்கொண்டு இருளுக்குள் குனிந்து வெளிச்சம் வரட்டும் என்று காத்திருந்தேன். கப்பல் வெளியே புயலிலும் அலையிலும் சிக்கி அலைக்கழிந்து கொண்டிருந்தது.
இதுவே வேறு ஒரு நாளாக இருந்தால் இருட்டுக்குள் அமர்ந்து அழக்கூட செய்யலாம். கப்பல் வேலைக்கு வந்த புதிதில் பல நாட்கள் வலியிலும் வேதனையிலும் அறையில் தனிமையில் அமர்ந்து அழுதிருக்கிறேன். மதுவோ இசையோ ஆற்றுப்படுத்த முடியாத அளவிற்கு விரக்தியின் விளிம்பில் வாழ்ந்து மீண்டு வந்திருக்கிறேன். ஒவ்வொரு காயமும் தழும்பாக மாறும் வரை காத்திருந்து அடுத்த காயத்திற்கு உடலையும் மனதையும் தயார் படுத்தியிருக்கிறேன். இந்த சில வருடங்களில் கடல் வாழ்வின் வழியே எல்லாமே மறத்துவிட்டது. வாழ்க்கை புரிய தொடங்கிவிட்டது. மனம் தனிமைக்கும் உடல் வலிக்கும் பழகிவிட்டது.
ஏதோ சிறு ஒலி. யாரோ எதுவோ என்னிடம் கேட்கிறார்கள். அது தலைமை அதிகாரியின் குரலாக தெரிகிறது. ஆம் அவரே தான். மெல்லமெல்ல இப்போது அவரின் குரல் காதுகளில் ஒலிக்க ஆரம்பிக்கிறது. சில நொடிகளுக்கு பிறகு என்ன கேட்கிறார் என்று தெளிவாக விளங்குகிறது. என்னிடம் டார்ச் லைட் இருக்கிறதா என்று சத்தமாக கேட்டுக்கொண்டிருக்கிறார். கண்களை திறந்து அவர் இருந்த திசையை நோக்கி அவர் உருவத்தை பார்க்க முயற்சிக்கிறேன். இருளின் கண்களுக்கு எந்த உருவமும் புலப்படவில்லை. கையை கால்சராய் பையினுள் நுழைக்கிறேன். அங்கு டார்ச் லைட் இல்லை. உடலின் ஒரு அங்கம் போல என்னுடன் எப்போதும் இருக்கும் டார்ச் லைட் அப்போது இல்லை. டார்ச் லைட்டும், ரேடியோவும், ஆக்ஸிஜன் அளவிடும் கருவியும், விஷ வாயுக்கள் அளவிடும் கருவியும் இல்லாமல் கப்பலில் எப்போதும் எங்குமே நான் செல்வது கிடையாது. ஆனால் இப்போது ரேடியோ தவிர வேறு எதுவுமே என்னிடம் இல்லை. புயல் ஏற்படுத்திய பதட்டத்தில் அவற்றை எடுக்க மறந்துள்ளேன். அதுவே வேறொரு நாளாக இருந்திருந்தால் டார்ச் லைட் இல்லாததற்கு தலைமை அதிகாரி நிச்சயம் என்னை கடிந்துகொள்வார்.
அடுத்த அலை. பெரும் அலைகள் கப்பலை இடைவிடாது தாக்கி வடக்கு நோக்கி தென்னாப்பிரிக்கா கரையோரம் இருக்கும் பாறைகளுக்கு இழுத்துச் செல்கிறது. விரைவில் கப்பலின் இயந்திரம் சரிசெய்யப்பட்டு துரிதமாக கப்பலை இயக்கி அந்த பகுதியில் இருந்து தூரமாக சென்றுவிட வேண்டும். இல்லையெனில் நடக்கப்போகும் பேராபத்தை தடுக்க முடியாது. அதிகபட்சம் இன்னும் ஒரு மணி நேரம் வரை போராடலாம். அதற்கு மேல் கப்பல் பாறைகளில் மோதத் தொடங்கிவிடும். எழுந்து வரும் அலைகள் மதம்பிடித்த யானையின் தும்பிக்கையில் அகப்பட்ட ஒரு சிறு உடலை போல கப்பலை தூக்கி புரட்டி பாறைகளை நோக்கி தள்ளிச் செல்கிறது.
அடுத்து ஒரு பேரலை. கப்பல் பக்கவாட்டில் சாய்கிறது. கை அனிச்சையாக சுவரில் பொருத்தப்பட்டிருந்த கைப்பிடியை பிடித்துக் கொள்கிறது. இல்லையென்றால் மீண்டும் படிகளில் விழுந்து உருண்டிருப்பேன். சாயும் திசையில் இழுத்துச் செல்லப்பட்டு பிறகு பழைய நிலைக்கு வந்து, அதன்பிறகு எதிர்திசையில் இழுக்கப்பட்டு மீண்டும் பழைய நிலை என சாய்ந்து சாய்ந்து எழும் கப்பலில் கைப்பிடியை விடாமல் ஒரு கையில் தொங்கிக் கொண்டிருக்கிறேன். அலையில் கப்பல் இங்கும் அங்குமாக பக்கவாட்டிலும், முன்னும் பின்னும் என எங்கே முழுவதும் கவிழ்ந்துவிடுமோ என்கிற அளவிற்கு சாய்ந்து சாய்ந்து மீண்டு எழுந்தது.
ஆனால் எவ்வளவு சாய்ந்தாலும் கடலினுள் மூழ்காது. அதற்கான வாய்ப்பு மிகக் குறைவு. அது தான் கப்பலின் ரகசியம். பெரிதாக எதுவும் மாயம் இல்லை. தஞ்சாவூர் தலையாட்டி பொம்மையின் ரகசியம் தான். அது எப்படி எந்தப்பக்கம் சாய்ந்தாலும் மீண்டும் பழைய தன் நிலைக்கே திரும்பிவிடுமோ அதுபோல தான் கப்பலும் எந்தப் பக்கமாக சாய்ந்தாலும் மீண்டும் எழுந்து வந்து அதன் ஸ்திரத்தன்மையை அடைந்துவிடும். கப்பலின் மேல்பகுதியை விட அடிப்பகுதி அதாவது நீரினுள் மூழ்கியிருக்கும் பகுதி மூன்று மடங்கு வரை எடை அதிகமாக கொண்டிருக்கும். சாதாரணமாக ஒருவர் வெளியிலிருந்து பார்த்தால் முழுக்கப்பலும் நீரின் மேல் மிதப்பது போல தோன்றும். ஆனால் உண்மையில் அது அப்படி மிதக்காது. ஒரு பங்கு கப்பல் தான் நீருக்கு மேலே நம் கண்களுக்கு தெரியும். பெரும்பான்மையான மூன்று பங்கு வரையிலான கப்பல் மற்றும் அதன் எடை நீருக்குள் மூழ்கி இருக்கும். மேல் பகுதி எவ்வளவு தான் இங்கும் அங்கும் சாய்ந்தாலும் எடை அதிகம் கொண்ட கீழ்பகுதி நீருக்குள் வழுவாக இருந்து கப்பலை கவிழாமல் நிலைநிறுத்தும். அதுவும் இந்தக் கப்பலில் முழுவதும் இப்போது எடை ஏற்றப்பட்டுள்ளது. தேவைக்கு மேலே கப்பலின் எடை நீருக்குள் மூழ்கி உள்ளது. எனவே தலையாட்டி பொம்மை போல அலைகளுக்கு ஏற்ப ஆடிக்கொண்டிருக்குமே தவிர கப்பல் முழுவதும் கவிழ்ந்துவிடாது.
மூன்று மடங்கு வரை எடை நீருக்குள் அமிழ்ந்து இருந்தும் கப்பலால் எப்படி மிதக்க முடிகிறது என்று சந்தேகம் எழலாம். அதற்கான விடையை சுமார் 2270 ஆண்டுகளுக்கு முன்பே ஆர்க்கிமிடீஸ் கூறிவிட்டார். அவரின் தத்துவம் "எந்த ஒரு பொருளையும், முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ நீரினுள் அமிழ்த்தும் போது, அது பெறும் எடையிழப்பு அதனால் வெளியேற்றப்பட்ட நீரின் எடைக்குச் சமம்". இது தான் கப்பல் நீரில் மிதப்பதற்கான சூத்திரம். இன்னும் சுலபமாக விளங்க வேண்டுமென்றால் நியூட்டனின் மூன்றாவது விதியை எடுத்துக்கொள்ளுங்கள். "ஒவ்வொரு விசைக்கும் ஒரு எதிர்விசை உண்டு". அதாவது கப்பலின் எடை நீரின் மீது விசையை செழுத்தும் போது, அதே நீர் மீண்டும் கப்பலின் மீது எதிர்விசையை செழுத்தும். இது ஒரு முடிவிலா தொடர் செயல்பாடு. இதுதான் எவ்வளவு எடையுள்ள கப்பலையும் தொடர்ந்து மிதக்க வைக்கிறது.
நிமிடங்கள் கடந்து சென்றது. படிகளில் அமைதியாக அமர்ந்திருந்தேன். இருளுக்கு ஊடாகவே தலைமை அதிகாரி மெல்ல மெல்ல படிகளில் இறங்கிக் கொண்டிருக்கும் சத்தம் இப்போது கேட்க ஆரம்பித்தது. திடீரென்று ஏதோ ஒரு இயந்திரத்தின் சத்தம். அதைத் தொடர்ந்து கப்பல் முழுவதும் வெளிச்சம் பரவியது. ஒவ்வொரு கப்பலிலும் எமர்ஜென்சி ஜெனரேட்டர் என்று ஒன்று இருக்கும். பிரதானமாக இருக்கும் ஜெனரேட்டர்களின் செயல்பாடு நிறுத்தப்பட்ட அடுத்த 45வது நொடிக்குள் இந்த எமர்ஜென்சி ஜெனரேட்டர் தானாகவே இயங்க தொடங்கிவிடும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும். இல்லையெனில் அது வைக்கப்பட்டுள்ள கப்பலின் வெளிப்பகுதியில் உள்ள தனி அறைக்கு யாராவது ஒருவர் சென்று இயங்கவைக்க வேண்டும். இது பொறியாளரின் பணி. இப்போது யாரோ ஒரு பொறியாளர் தான் புயலுக்கு நடுவே கப்பலின் வெளிப்பகுதிக்கு சென்று அதனை செயல்பட வைத்திருக்க வேண்டும்.
அடுத்த 12 மணி நேரங்கள் வரை இந்த ஜெனரேட்டர் தொடர்ந்து இயங்கி கப்பலில் தேவையான மற்றும் முக்கியமான இடங்களுக்கு வெளிச்சம் தரும். குறிப்பாக இயந்திர அறை, நேவிகேசன் அறை, நேவிகேசனுக்கு பயன்படும் மின் உபகரணங்கள், தீ அனைக்க பயன்படுத்தப்படும் பம்புகள் (Fire Pumps), கப்பலின் உள்ளே இருக்கும் முக்கியமான வழித்தடங்கள், கப்பல் மூழ்கும்போது தப்பிச் செல்வதற்கு பயன்படுத்தப்படும் உயிர்பிழைக்கும் படகுகள் (Life boat, Rescue boat) என முக்கியமான இடங்களுக்கு கிடைக்கும் குறைந்தபட்ச மின்சாரத்தைக் கொண்டு நெருக்கடியான காலக்கட்டங்களில் போராடலாம். அதற்குள் பிரதான ஜெனரேட்டரை (Main) பழுதுபார்த்து மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டுவந்துவிட வேண்டும். இல்லையெனில் முழுக்கப்பலும் இருள் தான். அதேபோல இந்த எமர்ஜென்சி ஜெனரேட்டரை எப்படி இயங்க வைப்பது என்று கப்பலில் உள்ள ஒவ்வொருவருக்கும் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை செயல்முறை விளக்கம் தர வேண்டும்.
டைட்டானிக் கப்பல் அட்லாண்டிக் சமுத்திரத்தில் மூழ்கிய போது அதில் இருந்த பொறியாளர் ஒருவர் கூட உயிர்பிழைக்கவில்லை. 30 பொறியாளர்களும் அவர்களுக்கு துணையாக இருந்த மற்ற பணியாளர்களும் என மொத்த பேரும் கப்பலோடு சேர்ந்து நீரில் மூழ்கி உயிரிழந்தனர். காரணம் அவர்கள் டைட்டானிக் மூழ்கிய கடைசி நொடிவரை இயந்திர அறையில் இருந்து கப்பலுக்கு மின்சாரம் தருவதற்காக போராடிக் கொண்டிருந்தார்கள். அந்த மின்சாரம் மட்டும் அப்போது கிடைக்காமல் போய் இருந்தால் அன்று ஒருவர் கூட உயிர் பிழைத்திருக்க முடியாது. 1500 பேர் இறந்த அந்த விபத்தில் 705 பேர் உயிர் பிழைத்தார்கள் என்றால் அதற்கு அந்த பொறியாளர்கள் தான் முதல் காரணம். தங்கள் உயிரை தியாகம் செய்து தான் இத்தனை உயிரை அவர்களால் காப்பாற்ற முடிந்தது. பிழைத்தவர்கள் அவர்களுக்கு தான் முதலில் நன்றி சொலுத்தியிருக்க வேண்டும்.
அதன்பிறகு பிரிட்டன் மகாராணி விக்டோரியா டைட்டானிக் பொறியாளர்களின் தியாகத்தை பாராட்டி உலகெங்கிலும் உள்ள கப்பல் பொறியாளர்கள் தங்கள் தோள்களின் மீது அணியும் பட்டைகளில் (Epaulettes) உள்ள பொன்னிற கோடுகளோடு சேர்த்து வயலட் நிற கோடுகளையும் அணிந்துகொள்ள என ஆணையிட்டார். அன்று அவர்கள் செய்த உயிர்தியாகம் இன்றும் உலக கப்பல் பொறியாளர்களின் தோள்களில் வயலட் நிற கோடுகளாய் வாழ்ந்து கொண்டிருக்கிறது.
ஆனால் இன்னொரு பக்கத்தில் அதே விபத்தில் அதிகாரிகள் தரப்பில் 59 பேர்களுக்கு 40 பேர் உயிர்தப்பிவிட்டனர். ஆனால் கேப்டன் உயிர்தப்பவில்லை. இறந்த 1500 பேர்களுக்கும் கப்பலுக்கும் சேர்த்து அவர் தானே பொறுப்பு ஏற்க வேண்டும். எனவே அவர் தற்கொலை செய்துகொண்டார். கப்பல் மூழ்கிய பிறகு அதன் கேப்டன் உயிரோடு இருந்தால் சட்ட வழக்குகள் மற்றும் மனவுளைச்சலை எதிர்கொண்டே வாழ்நாள் முழுதும் போய்விடும். அதற்கு கப்பலோடு சேர்ந்து தானும் மூழ்கிவிடுவதே ஒரு கேப்டனுக்கு தன் வாழ்வில் பெரிய நிம்மதியை தரும் என நம்புகிறேன்.
டைட்டானிக் மூழ்கிக் கொண்டிருக்கிறது. ஒரு இரண்டாம் அதிகாரியின் மேற்பார்வையில் கப்பலிலிருந்து பயணிகள் உயிர்பிழைக்கும் படகுகளுக்கு மாற்றப்பட்டு கொண்டிருக்கிறார்கள். அப்போது அந்த அதிகாரி ஒரு வசனத்தை அழுத்தி சொல்கிறார். மூழ்கும் கப்பலிலிருந்து உயிர்காக்கும் படகுகளுக்கு பயணிகள் ஏற்றப்படும் போது இந்த வசனத்தை கூறலாம் என மாலுமிகளுக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.
அது 1840இல் மாலுமிகளுக்கான சட்ட விதிகளுள் ஒன்றாக இயற்றப்பட்டு
அத்தனை வருடங்களாக நடைமுறையில் இருந்தாலும்கூட டைட்டானிக் மூழ்கியதற்கு பிறகு தான் உலகப்புகழ் அடைந்தது. உலகெங்கிலும் இன்றுவரை கருனையின் வார்த்தைகளாக சொல்லப்பட்டு வரும் அந்த வசனம் "children and ladies first".
கப்பலில் விபத்துகள் நடப்பது முதலில் எங்களைப் போன்ற அதிகாரிகளின் கவனக்குறைவால் தான். ஆனால் கப்பல் மூழ்கும்போது முதலில் உயிர்தப்புவதும் நாங்கள் தான். அதே நேரம் முதலில் பலியாவது பாவம் ஏதும் அறியா பொறியாளர்கள் தான். கப்பலின் அடிப்பகுதியில் இருக்கும் இயந்திர அறையிலிருந்து அவர்கள் மேலே ஏறி வருவதற்குள் கப்பல் நீரில் முழ்கிவிடும். அந்த நேரத்திற்குள்ளாக தப்பி பிழைத்த அதிகாரிகள் கடலில் மூழ்கும் பொறியாளர்களுக்கு அஞ்சலி செழுத்த தயாராகி விட்டிருப்போம்.
கப்பலில் வெளிச்சம் வந்ததும் தான் தாமதம். தலைமை அதிகாரி படிகளில் இறங்கி விரைந்து கீழே சென்றார். என் பக்கம் திரும்பி பார்க்க கூடவில்லை. நானும் வலியை பொருட்படுத்தாது எழுந்து அவரை தொடர்ந்து சென்றேன். இயந்திர அறை இருக்கும் தளத்திற்கு மேல் தளத்தில் பணியாளர்கள் தங்குவதற்கான ஓய்வு அறைகள் இருக்கும். அங்கு ஓய்வில் இருந்தவர்கள் அபாய ஒலி கேட்டு இயந்திர அறை வாயிலில் வந்து என்ன நடக்கிறது என்று தெரியாமல் குழப்பத்தோடு நின்றுகொண்டிருந்தனர். உயர் அதிகாரிகளின் கட்டளை இல்லாமல் அவர்களால் ஒன்றும் செய்யமுடியாது. அதுவரை காத்திருக்கத்தான் வேண்டும்.
தலைமை அதிகாரி வருவதை பார்த்து அவருக்கு வழிவிட்டு அனைவரும் ஒதுங்கி நின்றனர். அதில் ஒருவர் எங்களுக்காக கதவை திறந்து வைத்து பிடித்துக்கொண்டார். அவர்களின் முகங்களில் எல்லாம் பதட்டத்தையும் அடுத்து என்ன நடக்கபோகிறதோ என்கிற திகைப்பையும் பார்க்க முடிந்தது.
வாயிலை நெருங்கியதும் இயந்திர அறையின் உள்ளிருந்து வீசிய வெப்பக்காற்று சட்டென்று முகத்தில் அறைந்தது. சாதாரண நாட்களிலேயே உள்ளே வெப்பத்தின் அளவு இயந்திரங்களின் இயக்கத்தின் காரணமாக சற்று கூடுதலாகவே இருக்கும். கூடுதல் என்றால் வெளியே நிலவும் வெப்பநிலையை விட இரண்டுமடங்கு வரை கூட சிலநேரம் கூடுதலாக இருக்கும். அதைவிட இயந்திரங்கள் எழுப்பும் காது சவ்வு கிழியும் சத்தம். இந்த சத்தத்தினாலும் அதீத வெப்பத்தினாலும் அந்த அறையையே சிலநேரம் நரகம் போல காட்சியளிக்கும். பொறியாளர்கள் இப்படிப்பட்ட ஒரு இடத்தில் தொடர்ந்து மணிக்கணக்காக எப்படித்தான் வேலை செய்கிறார்களோ என்று ஆச்சர்யமாக இருக்கும்.
இயந்திர அறை வாயில் வழியே கவனமாக தலைமை அதிகாரியும் நானும் உள்ளே சென்றோம். அவர் சைகை காட்டிய பிறகு மற்றவர்களும் எங்களை பின்தொடர்ந்து வந்தனர். வாயிலின் அருகே இருக்கும் நடைமேடையிலிருந்து கீழே பார்க்கும்போது அந்த அறையே ஒரு மாபெரும் அரங்கம் போல காட்சியளிக்கும். கப்பலின் இந்த இயந்திர அறை இருக்கும் பகுதி முழுக்க முழுக்க கடலினுள் மூழ்கி இருக்கும். அப்போது தான் பிரதான இயந்திரம் இயங்கி வெளியே நீருக்குள் இருக்கும் காத்தாடியை சுழலச்செய்து கப்பலை செலுத்த முடியும். இந்த பகுதி தான் கப்பலில் உள்ள பொறியாளர்களின் உலகம். இந்த அரங்கத்தில் குறைந்தது ஐந்து தளங்கள் இருக்கும். கடைசி தளத்தில் தான் பிரம்மாண்டமான பிரதான இயந்திரம் இருக்கும்.
இன்றளவும் உலகின் பிரம்மாண்ட இயந்திரங்கள் யாவும் கப்பலில் தான் பயன்படுத்தப்படுகின்றன.கப்பல் இயந்திரங்களின் பிரம்மாண்டங்களை ஒப்பிடும்போது தரையில் பயன்பாட்டில் உள்ள இயந்திரங்கள் எல்லாம் பத்தில் ஒரு பங்கு தான் இருக்கும். உதாரணத்திற்கு 2008இல் தயாரிக்கப்பட்டு Emma Maersk என்கிற 400 மீட்டர் நீளமுள்ள கண்டெயினர் கப்பலில் பொருத்தப்பட்ட இயந்திரம் தான் இன்றளவும் உலகின் மிகப்பெரிய தனி இயந்திரம். அதன் நீளம் 27 மீட்டர். அகலம் 13.5 மீட்டர். மொத்த எடை 2,300 மெட்ரிக் டன்கள். இந்திய தண்டவாளங்களில் ஓடும் பெரும்பெரும் ரயில் என்ஜின்களின் எடை கூட சராசரியாக 120 மெட்ரிக் டன்கள் மட்டும் தான்.
இந்த ராட்சத இயந்திரம் ஒரு மணி நேரத்திற்கு இயங்க வேண்டுமென்றால் எவ்வளவு எரிபொருள் தேவைப்படும் தெரியுமா. கச்சா எண்ணெய் மட்டும் 14000 லிட்டர் வேண்டும். (Heavy Fuel Oil - சுத்திகரிக்கப்படுவதற்கு முன் உள்ள கச்சா எண்ணெய் தான் நேரடியாக கப்பல் இயந்திரங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது). ஒரு நாளைக்கு 3.36 லட்சம் லிட்டர். இது தவிர ஜெனரேட்டர்கள் இயங்குவதற்கு தனியே 1.2 லட்சம் லிட்டர் டீசல் வேண்டும். இந்திய சாலைகளில் எரிபெருள் ஏற்றிச்செல்லும் டேங்கர் லாரிகளின் கொள்ளளவு கூட வெறும் 12000 லிட்டர் தான். இந்த ஒரு கப்பல் ஒரு நாளைக்கு இயங்கவேண்டுமென்றால் இதைப்போல 35 டேங்கர் லாரிகளில் ஏற்றக்கூடிய மொத்த எண்ணெய்யும் வேண்டும்.
மேலே நாங்கள் நின்ற தளத்திலிருந்து பார்க்கும்போது கீழே பிரதான இயந்திரம் இருந்த பகுதி முழுக்க புகை பரவியிருந்தது. கூர்ந்து பார்த்ததில் பொறியாளர்களையும் ஒருசில பணியாளர்களையும் புகைக்கு ஊடாக பார்க்க முடிந்தது. அவர்கள் அங்குமிங்கும் ஓடுவதும் ஏதோ அவசர வேலை செய்வதுமாக இருந்தனர். அதற்கும் மேல் உள்ள தளத்திலிருக்கும் இயந்திர கட்டுப்பாட்டு அறையிலிருந்து தலைமை பொறியாளர் கீழே பிரதான இயந்திரம் இருந்த தளத்திற்கு படிகளில் அவசரமாக இறங்கிக் கொண்டிருந்தார். அவரைப் பார்த்ததும் தலைமை அதிகாரி கீழே இறங்கி அவரை நோக்கி சென்றார். அவரோடு நாங்களும் கீழே சென்றோம். கீழே இயந்திரத்தின் அருகே சென்று தலைமை பொறியாளரிடம் தலைமை அதிகாரி பேச முற்பாட்டார். இயந்திரத்தின் ஒரு பக்கத்தில் நாங்கள் இருந்தோம். அடுத்த பக்கத்தில் சிலர் இருந்தனர். ஒரு வெளிச்சம். அதைத்தொடர்ந்து புகையும் நெடியும் கண்களையும் நாசியையும் கூராக தாக்கியது. திடீரென்று அடுத்த பக்கத்திலிருந்து எழுந்த தீ இயந்திரத்திற்கு மேலே பரவி எரிய ஆரம்பித்தது. அங்கிருந்து பணியாளர்கள் சத்தமிட்டு கூச்சலிட்டனர். நான் அப்போது கண்ட காட்சியில் அப்படியே உறைந்து நின்றேன்.
'கடுகத்தனை நெருப்பானாலும் கப்பலைக் கொளுத்திவிடும்'
- என் பழமொழி.
(தொடரும்.)
எதற்காக எழுதுகிறேன்
என் தாத்தா ஒரு ஆசிரியர். குடும்பம் விவசாய குடும்பம். நானும் தாத்தாவும் காலை விடிவதற்குள் வயலில் இறங்கினால் காலை உணவிற்குள் ஒரு ஏக்கர் வரப்பும் வெட்டி முடித்துவிட்டு கரையேறிவிடுவோம். விவசாயம் எனக்கு உழைக்க கற்றுக்கொடுத்தது. தாத்தா வாழ வழிகாட்டினார். நான்கு வயதிலிருந்தே தாய் தந்தையரை பிரிந்து அவரிடம் தான் வளர்ந்தேன். இன்றும் அப்படித்தான்.
மழை கொஞ்சம் அழுத்தி பெய்தாலும் சாலை துண்டிக்கப்பட்டு ஊருக்குள் பஸ் வராது. பள்ளிக்கு 12 கி.மீ செல்ல வேண்டும். அவரோடு தான் தினமும் செல்வேன். எனக்கு பள்ளி மூன்று மணிக்கே முடிந்துவிடும். அவருக்கு ஆறு மணி ஆகும். அதுவரை பள்ளி வளாகத்தில் இருந்த நூலகத்தில் காத்திருப்பேன். ஒருநாள் அங்கு இருந்த ஒரு காமிக்ஸ் புத்தகத்தை எடுத்து வாசிக்க ஆரம்பிக்கும்போது என்னுடைய வயது எட்டு. அன்றிலிருந்து வாசிப்பு பழக்கம் தொற்றிக்கொண்டது. பதிமூன்று வயதிற்குள் நூலகரின் வழிகாட்டலோடு இலக்கியம் வாசிக்க ஆரம்பித்துவிட்டேன். மாமாவின் சேகரிப்பில் வீட்டிலிருந்த சோவியத் யூனியன் இதழ்களை வாசிக்கும் போது ரஷ்யாவிற்கு போவது பற்றி கனவு காண ஆரம்பித்தேன். எட்டாம் வகுப்பு படிக்கும்போது தினகரன் வசந்தத்தில் கப்பல் பற்றிய ஒரு கட்டுரை வந்திருந்தது. அன்று ஏன் என்றே தெரியாமல் அந்தப் பக்கத்தை வெட்டி எடுத்து பாதுகாத்து வைத்திருந்தேன். அதை வாசிக்கும் போதெல்லாம் எனக்கு வியப்பாக இருக்கும்.
தாத்தா பணி ஓய்வு பெற்றவுடன் என்னுடைய ஒன்பதாம் வகுப்பிற்காக வேறு கிராமத்தில் உள்ள ஒரு பள்ளிக்கு மாற்றப்பட்டேன். என் நல்ல நேரம் நான் பள்ளியில் சேர்ந்தது முதல் பஸ் வரவில்லை. வீட்டிலிருந்து பள்ளிக்கு ரொம்ப தூரம் எல்லாம் இல்லை. வெறும் 12 கிலோமீட்டர் தான். தினமும் சைக்கிள் மிதிப்பேன்.
பன்னிரெண்டாம் வகுப்பு படித்தது ராமநாதபுரம் மாவட்டத்தின் ஒரு பின் தங்கிய கிராமத்தில் இருந்த ஒரு கிருத்தவ பள்ளியில். படிப்பதை தவிர மற்ற அனைத்தையும் சரிவர செய்வேன். பாதிரியார்களும் ஆசிரியர்களும் பள்ளியின் கலை இலக்கிய முகமாக என்னை வைத்திருந்தார்கள். பாதிரியார் சென்னை லயோலா கல்லூரியில் விஷீவல் கம்யூனிகேசன் சேர்த்துவிடவா என கேட்டுக்கொண்டே இருப்பார். தாத்தாவிற்கு அதிகபட்சம் நான் ஒரு ஆசிரியராக ஆக வேண்டும் என்று ஆசை. ஆனால் என் கனவுகள் எல்லாம் வேறாக இருந்தது.
எங்கள் பகுதியில் இருந்து அன்றே ஒரு கப்பல் பொறியாளர் உருவாகியிருந்தார். அன்று அது மிகப்பெரும் சாதனையாக எல்லோராலும் பார்க்கப்பட்டது. அவரின் வழிகாட்டலோடு சென்னை அமெட் பல்கலைகழகத்தில் சேர்ந்தேன். பிறகு இரண்டு வருடத்தில் பலகட்ட முயற்சிகளுக்கு பிறகு பிரிட்டனில் உள்ள ஒரு கல்லூரியில் படிக்க இடம் கிடைத்து அங்கு சென்றேன். அப்போது எனக்கு வயது இருபது. அன்றிலிருந்து தொடங்கியது என் உலக பயணம். இந்த எட்டு வருடங்களில் வேலை மற்றும் படிப்பின் காரணமாக முப்பது நாடுகளை கடந்துள்ளேன். அதில் இருபதுக்கும் மேறப்பட்ட நாடுகளில் இறங்கி சுற்றியுள்ளேன்.
இதற்கு ஊடாக மூன்று வருடங்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞர் அமைப்பில் ஒரு பொறுப்பில் இருந்து கட்சிப்பணியாற்றியது. வேலையில்லாமல் வீட்டில் இருந்தது. வேலை தேடி மும்பையில் சுற்றியது. சென்னையில் ஆறு மாதங்கள் ஒரு அலுவலகத்தில் வேலை பார்த்தது. காதல் தோல்வி. பிறகு தீவிரமாக கப்பலில் வேலை செய்ய ஆரம்பித்தது என இந்த பல்வேறு காலக்கட்டங்களில் வாசிப்பை மட்டும் என்றுமே கைவிட்டது கிடையாது. கடந்த சில வருடங்கள் ஓய்வேயில்லாத வேலையின் காரணமாக கொஞ்சம் தேக்கமடைந்தது என்று வேண்டுமானால் சொல்லலாம்.
சாரு, ஜெமோ, எஸ்ரா தொடங்கி புதுமைப்பித்தன், ஜெயகாந்தன் வரை பின்னோக்கி சென்று தமிழ் நவீன இலக்கிய படைப்புகளை முடிந்தவரை வாசித்திருந்தாலும் எனக்கான ஒரு எழுத்தாளராக நான் நினைப்பது என்றுமே அ.முத்துலிங்கத்தை தான். அவர் ஒரு உலக குடிமகன். அவர் எழுத்து ஒரு உலக எழுத்து. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்று இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பு சொன்ன கனியன் பூங்குன்றனாக அவரை இன்று பார்க்கிறேன். அவர் வழியில் பயணிக்கிறேன். அவரையே என் ஆதர்சமாக கருதுகிறேன். சொமாலியாவில் கூட இலக்கியம் உள்ளது என்றும் அவர்களுக்கும் மேன்மையுண்டு என்றும் எழுதியவர் தமிழில் அவர் மட்டும்தான். துளி அளவிற்கு கூட அவர் எழுத்தில் வெறுப்பு இருக்காது. மானுடத்தின் மீதான அன்பும் கருனையும் நம்பிக்கையும் ஆற்றலோடு வெளிப்படுவதை அவர் எழுத்தில் பார்க்கலாம்.
கடந்த வருடம் அவர் எழுதிய தாய்மொழி என்ற ஒரு கட்டுரையை வாசித்தேன். அதன்பிறகு தான் எனக்கு இதுநாள்வரை கிடைத்த உலக அனுபவங்களை எழுதி ஆவனப்படுத்த வேண்டும் என்ற உந்துதல் ஏற்பட்டது. எழுதுவது என்றுமே என் வேலையில்லை என நினைத்திருந்த என்னை அவரின் அந்த ஒரு கட்டுரை தான் எழுத தூண்டியது. என் அனுபவங்கள் தாண்டி என்னால் எதையும் எழுத முடியாது என்ற தெளிவும் எனக்கு உள்ளது.
தமிழகத்திலிருந்து மாலுமிகளாக உருவாகியவர்களின் எண்ணிக்கை எவ்வளவு என்று இதுவரை எந்த ஆவணங்களிலும் முறையான பதிவுகள் இல்லை. ஆனால் என் கணக்கீட்டின் படி அவர்களின் எண்ணிக்கை லட்சத்தை தாண்டும். இன்றைய தேதிக்கு வேலையில் இருக்கும் மாலுமிகளின் எண்ணிக்கை மட்டும் ஒரு லட்சத்தை தொடும். ஆனால் அவர்களைப் பற்றி அவர்களின் வாழ்க்கை பற்றி இதுவரை பெரிதாக எந்த ஆவணங்களும் தமிழில் இல்லை. நான் தேடியது வரை தமிழ் இலக்கியத்திலும் அவர்களை பற்றிய பதிவுகள் மிகமிகக் குறைவே. இருக்கும் சில பிரதிகளும் மக்களிடமும் வாசகர்களிடமும் வெகுவாக சென்று சேரவில்லை என்றே நினைக்கிறேன்.
மாலுமிகளைப் பற்றி மாலுமிகளால் மட்டும் தான் எழுத முடியும். வேறு எந்தவொரு எழுத்தாளராலும் எழுத முடியாது. இந்த நிலையில் எந்த ஒரு மாலுமியும் பெரிதாக எழுத முன்வராத சூழலிலிருந்து எழுத வந்த என் மூத்தவர்கள் எழுத்தாளர் நரசய்யா, ஜீனியர் விகடனில் மாலுமிகள் பற்றிய கட்டுரைகள் எழுதிய து.கனேசன், கப்பல்காரன் டைரி என்கிற பெயரில் இணையத்திலும் சிறு பத்திரிக்கையிலும் கடந்த சில வருடங்களாக எழுதிவரும் அண்ணன் ஷாகுல் ஹமீது ஆகியோரை என் முன்னோடிகளாக கருதுகிறேன். கடலோடி என்கிற வார்த்தையை கண்டறிந்து முதன்முதலில் புழக்கத்திற்கு கொண்டுவந்தவர் நரசய்யா. அவரின் 'கடலோடி' என்கிற புத்தகம்தான் கப்பல் வாழ்வை பற்றி தமிழ்மொழியில் எழுதப்பட்ட முதல் புத்தகம். ஐம்பது வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்ட அந்த புத்தகம் தமிழுக்கு ஒரு பொக்கிஷம்.
ஆனால் இங்கு நான் ஒன்றை சொல்ல விரும்புகிறேன். இவர்களால் எழுதமுடியாத ஒன்றை என்னால் எழுதமுடியும் என்று நம்புகிறேன். இவர்களிலிருந்து நான் வேறுபட்டவன். இவர்கள் மூவரும் பொறியியலாளர்கள். துறை ரீதியாக இவர்களுக்கு தெரியாத கடலை பற்றிய கப்பலை பற்றிய பல நுணுக்கங்கள் எனக்கு தெரியும். காரணம் நான் மட்டும் தான் கேப்டனின் வரிசையில் வரும் கப்பலை இயக்கும் கப்பல் மாலுமி. கடல்வாழ்வில் அவர்கள் பார்க்காத காட்சிகளையும் பெறாத அனுபவங்களையும் ஒருபடி மேலே சென்று என்னால் பெற முடியும். உதாரணத்திற்கு புயலில் நாங்கள் கப்பலின் மேல்தளத்தில் கப்பலை இயக்கி கொண்டிருக்கும்போது அவர்கள் கப்பலின் அடியில் வெளியே என்ன நடக்கிறது என்றே தெரியாத இயந்திர அறையில் வேலை செய்துகொண்டிருப்பார்கள்.
நான் தற்போது முகநூலில் எழுதிவரும் கடல்புறா தொடர்தான் என் எழுத்தின் தொடக்கம். செய்திகளாக மட்டும் இருந்தால் விரைவில் சலிப்பு தட்டிவிடும் என்று நிகழ்வுகளை புனைவுகளாக மாற்றி கற்பனை கலந்து எழுதி வருகிறேன். ஆரம்பத்தில் முகநூலில் விளையாட்டாக எழுதி பழகலாம் என்று தான் எழுத தொடங்கினேன். ஆனால் நான் எதிர்பார்த்ததை விட விரைவில் வெகுவான வாசகர்களை சென்று அடைந்தது எனக்கு மகிழ்ச்சிக்குரியது. வாசகர்கள் மட்டும் அல்லாது பல எழுத்தாளர்களும் பெரியோர்களும் தொடர்ந்து வாசித்து வாழ்த்தி தங்களின் மேலான கருத்துக்களை கூறுவது நான் இனி மென்மேலும் பொறுப்பாக எழுதவேண்டுமென்ற தூண்டுதலை எனக்கு கொடுக்கிறது.
இதன் காரணமாக நண்பர்களின் ஆலோசனைப்படி நான் எழுதுவதற்கென ஒரு BLOG ஆரம்பித்துள்ளேன். நரசய்யாவிற்கு நன்றி கூறும் விதத்தில் அந்த தளத்திற்கு 'கடலோடி' என்று பெயரிட்டுள்ளேன். இனி இங்கு தான் எழுதுவேன். இதுவரை எழுதிய சில கட்டுரைகளையும் இங்கு பதிவு செய்துள்ளேன். இதுவரை கடல்புறா தொடரை முகநூலில் வாசித்தவர்கள் இனி இங்கு வந்து வாசிக்கலாம். வாசிப்பவர்களுக்கு புரிய வேண்டி இனிவரும் வரும் பதிவுகளில் சில படங்களையும் இணைத்து எழுதுகிறேன். கடலோடிக்கு உங்கள் அன்பையும் ஆதரவையும் எதிர்பார்க்கிறேன்.
'கடலோடி' BLOG க்கிற்கான சுட்டியை பின்னூட்டத்தில் கொடுத்துள்ளேன்.
நன்றி.
உலக கடலோடிகள் தினம்
வரலாற்று ஆவணங்களின்படி உலகின் முதல் கடல்வழி போக்குவரத்து நடந்தது இன்றிலிருந்து சுமார் 4600 வருடங்களுக்கு முன்பு. எகிப்தின் நான்காவது வம்சவழி மன்னன் நெப்ரூ (Sneferu) தன் காலத்தில் மூன்று பிரமிடுகளை கட்டினான். அதில் ஒன்று தான் எகிப்தின் மூன்றாவது பெரிய பிரமிடான சிகப்பு பிரமிட் (Red pyramid). இதன் சிறப்பு என்னவென்றால் இதுதான் பிரமிடுக்கு உண்டான கூம்பு வடிவ நேர்த்தியுடன் கட்டப்பட்ட உலகின் முதல் பிரமிட். இதன் காரணமாக இதனை உண்மையான பிரமிட் (True pyramid) என்றும் அழைக்கின்றனர். இந்த பிரமிடை கட்ட வேண்டிதான் செங்கடல் வழியாகவும் நைல் நதி வழியாகவும் லிபியாவில் இருந்தும் பன்டைய நுபியாவில் இருந்தும் பிடித்துவரப்பட்ட அடிமைகளையும் கட்டுமானப் பொருட்களையும் எகிப்திற்கு கொண்டுவரும் பொருட்டு முதன்முதலில் கப்பல்கள் கட்டப்பட்டன.
அதன் அடிப்படையில் சிடர் மரத்தை கொண்டு கட்டப்பட்ட சுமார் ஐம்பது மீட்டர் நீளமுள்ள கப்பல் தான் உலகின் முதல் கப்பல் என வரலாற்று ஆய்வாளர்களால் ஏற்றுக்கொள்ளப் பட்டுள்ளது. இது கட்டப்பட்ட வருடம் கிமு 2613. இந்த உலகின் முதல் கப்பலுக்கு வரலாற்று ஆய்வாளர்கள் இட்ட பெயர் 'Praise of the Two Lands'. சிகப்பு பிரமிடை கட்டிய லிபிய மற்றும் நுபிய அடிமைகளின் நினைவாக இந்தப் பெயரை வைத்திருக்கலாம் என நம்புகிறேன்.
இதே காலக்கட்டத்தில் வாழ்ந்த இலங்கை மன்னன் ராவணன் கிழக்கே பசுபிக் சமுத்திரத்தை தாண்டி தென்னமேரிக்க நாடுகள் வரை வணிகத்தொடர்பு கொண்டிருந்ததாகவும் மாயன் இளவரசி ஒருத்தியை மனம் முடித்து இலங்கை அழைத்து வந்ததாகவும் கதைகள் உள்ளன. இவைகள் கதை அளவிலேயே உள்ளன. முழுவதும் நிரூபிக்கப்படவில்லை. ஆனால் இதற்கு அடுத்த ஆயிரம் வருடங்களில் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் வாழ்ந்த மக்கள் மேற்கே மடகாஸ்கர் மற்றும் அரேபியா முதல் கிழக்கே நியூசிலாந்து வரை வணிகத்தொடர்பில் இருந்ததற்கான சான்றுகள் உள்ளன. பிற்காலங்களில் அவர்கள் மேலும் மேற்கு ஆப்ரிக்காவின் கானா முதல் பசிபிக் அமேரிக்காவின் மேற்கு கரை வரை சென்றதாகவும் உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இவர்கள் தான் கடல்வழி அறிவை கொண்டிருந்த உலகின் முதன்மக்கள். அதன் பிறகு கப்பல் மாலுமிகளால் உலகின் பல நாடுகள் காலனி ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவரப்பட்டு பல நூற்றாண்டுகள் அவர்களாலேயே ஆளப்பட்டது என்பது வரலாறு.
இன்று உலகம் முழுவதும் 55000 கப்பல்களும் 11 லட்சம் மாலுமிகளும் உள்ளனர். இதில் இந்தியர்கள் மட்டும் சுமார் 2.5 லட்சம் பேர். உலகின் 90 சதவிகித சரக்கு போக்குவரத்து கடல்வழியே கப்பல்கள் மூலமாக தான் நடைபெறுகிறது. வருடத்திற்கு சுமார் 15 பில்லியன் டன் சரக்குகள் கப்பல்களில் கையாளப்படுகின்றன. உலகப் பொருளாதாரத்திலும் வளர்ச்சியிலும் கப்பல் போக்குவரத்து தான் முதல் பெரும் பங்கை வகிக்கிறது.
இப்படிப்பட்ட ஒரு மாபெரும் துறை பற்றி வெளி உலகத்திற்கு அதிகம் அறியப்படாத சூழலில் 2010இல் லண்டனில் International Maritime Organization ஒவ்வொரு வருடமும் ஜீன் 25ஆம் தேதியை உலக கடலோடிகள் தினமாக (world seafarer's day) அறிவித்தது. பொது சமூகத்திற்கும் உலக மக்களுக்கும் கடலோடிகளை பற்றிய செய்திகளையும் வரலாற்றையும் தெரிந்து கொள்வதற்காகவும் அவர்களுக்கு வாழ்த்து கூறுவதற்காகவும் இந்த ஒரு நாள் தேர்ந்தெடுக்கப்பட்டது. இதன்படி 2011இல் இருந்து இந்தநாள் உலக கடலோடிகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
கப்பலில் ஒரு மாலுமி அதிகபட்சம் 11 மாதங்கள் வரை தான் பணியில் இருக்க முடியும் என்கிற ஒரு சர்வேதச விதிமுறை உள்ளது. அதற்கு மேல் இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு உடலளவிலும் மனதளவிலும் பெரும் பாதிப்புகள் ஏற்படலாம் என்பது தான் காரணம். இதைக் கவனத்தில் கொண்டு தான் கப்பலில் மாலுமிகளின் நலனுக்காக பல்வேறு வசதிகள் செய்துதரப் பட்டிருக்கும். இன்று கரோனா காலகட்டத்தில் சுமார் 7 லட்சம் மாலுமிகள் தங்கள் வேலைக்கான கால அளவு முடிந்தும் தரையில் இறங்க முடியாமலும், சொந்த நாட்டிற்கும், வீட்டிற்கும் செல்ல முடியாமலும் பல மாதங்களாக கடலிலேயே கப்பலிலேயே தொடர்ந்து இருந்து வருகின்றனர். இதோடு கப்பல்களும் நிறுத்தப்படாமல் தொடர்ந்து இயங்கிக் கொண்டுதான் இருக்கின்றன. இந்த கடினமான சூழல் இன்னும் எத்தனை நாட்களுக்கு நீடிக்கும் என தெரியவில்லை. அதுவரை அவர்கள் மனதளவிலும் உடலளவிலும் வலிமையோடு இருக்க வேண்டும் என இந்த நாளில் அவர்களை நினைவு கூறுவோம்.